×

திருட்டுப்போன 301 செல்போன் மீட்பு: உரியவர்களிடம் நாமக்கல் எஸ்.பி., வழங்கினார்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் திருட்டுப்போன ₹60 லட்சம் மதிப்பிலான 301 செல்போன்களை தனிப்படை போலீசார் மீட்டனர். மாவட்ட எஸ்பி நேற்று அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தார். நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், நேற்று காணாமல் போய் மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர், 310 பேருக்கு செல்போன்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டில் 585 செல்போன்கள் காணாமல் போனதாக, அதன் உரியைாளர்கள் புகார் அளித்திருந்தார்கள். இந்த செல்போன்களை கண்டுபிடிக்க சைபர் கிரைம் ஏடிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. இதில் தற்போது வரை 301 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. இவை மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது.

செல்போன்களை எடுத்துச் சென்றவர்கள் மீது வழக்கு எதுவும் போடவில்லை. செல்போனில் ரகசிய எண்ணை வைத்து தற்போது அதை பயன்படுத்தி வருபவர்களை கண்டுபிடித்து மீட்டுள்ளோம். செல்போனை திருடிச்சென்ற சிலர், தங்களின் குற்றங்களை ஒப்புக்கொண்டு கூரியர் மூலம் செல்போன்களை அனுப்பிவைத்துள்ளனர். இன்னும் சிலர் நேரில் வந்து கொடுத்துவிட்டு சென்றனர். பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக, 155260 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

மாவட்டத்தில் மக்களிடம் இந்த குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இதனால் சைபர் கிரைம் குற்றங்கள் குறைந்து வருகிறது. மீட்கப்பட்ட செல்போன்களின் மதிப்பு ₹60 லட்சமாகும். மீதமுள்ள 284 செல்போன்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். அரசு வேலை வாங்கித் தருவதாக யாராவது பணம் கேட்டால் கொடுத்து ஏமாற வேண்டாம். பணம் கொடுத்தால், அரசு வேலை கிடைக்காது.

நமது கடினமான உழைப்புதான் அரசு வேலையை தேடிக்கொடுக்கும். மோசடி நபர்களிம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அத்தகைய நபர்கள் குறித்து மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு எஸ்பி சரோஜ்குமார் தாகூர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி செல்லபாண்டியன், இன்ஸ்பெக்டர் வேதபிறவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Stolen ,Namakkal S.P. , Stolen 301 Cellphone Recovery: Namakkal S.P., provided to the rightful owners
× RELATED திருடிய 5 பைக்குகளுடன் 2 வாலிபர்கள் கைது திருவலம் அருகே