×

புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்: தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து..!

சென்னை: தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். நாகாலாந்தின் ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவியைத் தமிழகத்தின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

தற்போது அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, ஆர்.என்.ரவி என்கிற ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி, பிஹாரில் உள்ள பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம், சில காலம் பத்திரிகைத் துறை பணி என இருந்தவர் கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஆகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார்.

பின்னர் ஒன்றிய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். உளவுத்துறையிலும் இவர் பணியாற்றியுள்ளார். மேலும், 2012ல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்வுகளைத் தமது அனுபவங்களுடன் ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தார். இதன் பின்னர், அவர் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றினார். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார். தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும். தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : New Governor ,R. My. Ravi ,First Minister ,Tamil Nadu ,Stalin ,Twitter , Appointment of new Governor, RN Ravi
× RELATED மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு