சென்னை: சட்டப்பேரவையில் நேற்று பாப்பிரெட்டிபட்டி ஏ.கோவிந்தசாமி (அதிமுக) கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசும்போது, ”தமிழகம் முழுவதும் மண்பாண்டம் செய்பவர்கள், செங்கல் சூளை வைப்பவர்கள், நிலம் மேம்படுத்த வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள் மற்றும் சாலை மேம்பாடு செய்ய மண் எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கி மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்” என்றார். இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசியதாவது: தமிழகம் முழுவதும் மண்பாண்டம் தொழில் செய்பவர்களுக்கு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின்படி குளங்கள், ஏரிகளில் 800 மாட்டுவண்டி லோடு மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் உரிய உரிம கட்டணம் செலுத்தி மண் எடுக்கலாம். அதன்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்கள் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.