×

தமிழகத்தில் மேலும் 1,596 பேருக்கு கொரோனா: சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில், மேலும் புதிதாக நேற்று 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய  நிலையிலும் பள்ளி, கல்லூரிகள் கடந்த 1ம் தேதி முதல் திறக்கப்பட்ட நிலையில் படிப்படியாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அதன்படி கடந்த 1ம் தேதி முதல் படிப்படியாக பாதிப்பு அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,60,195 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,596 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,28,961 ஆக உயர்ந்துள்ளது. 16,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,534 பேர் கொரோனாவில் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 25,77,646 ஆக உள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 21 பேர் நேற்று உயிரிழந்தனர். இதுவரை 35,094 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையில் நேற்று புதிதாக 186 பேர், கோவை 224, செங்கல்பட்டு 108 பேர், ஈரோடு 130 என 4 மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாகவே உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,Tamil Nadu , Corona for another 1,596 in Tamil Nadu: 21 die without treatment
× RELATED உலகப் பத்திரிகை சுதந்திர நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!