×

பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளி மைதானத்தில் எலும்புகளுடன் முதுமக்கள் தாழி

பரமத்திவேலூர்:  பரமத்திவேலூர் அடுத்த கொந்தளம் அரசுப் பள்ளி மைதானத்தில், மரக்கன்றுகள் நடுவதற்கு தோண்டிய  குழியில் முதுமக்கள்தாழி மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கொந்தளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 2 ஏக்கர் அளவுக்கு விளையாட்டு மைதானம் உள்ளது. இதன் ஒருபகுதியில் இருந்த கருகிப்போன மரக்கன்றுகளை அகற்றி விட்டு, புதிதாக மரக்கன்றுகளை நடும்பணியில் மாணவ, மாணவிகள் நேற்று ஈடுபட்டனர். இதற்காக குழி தோண்டிபோது பானை உடையும் சத்தம் கேட்டது. உடனடியாக ஆசிரியர் பாதுகாப்பாக தோண்டி பார்த்தார்.

அதில் பெரிய முதுமக்கள் தாழி ஒன்று இருந்தது தெரிந்தது. அப்பகுதியில் உள்ள 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வரவழைத்து, பெரிய அளவில் பள்ளம் தோண்டி முதுமக்கள் தாழியை பத்திரமாக வெளியே எடுத்தனர். அதற்குள் எலும்புகள் இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தனர். தகவலறிந்து மாணவ, மாணவிகள், கிராம மக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்துச்சென்றனர். பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன்ராஜ், பாண்டமங்கலம் ஆர்ஐ மோகன் மற்றும் கொந்தளம் விஏஓ தமிழ்ச்செல்வன் ஆகியோர், எலும்புகளுடன் முதுமக்கள் தாழியை எடுத்துச்சென்றனர். அவை தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக, தாலுகா அலுவலக காப்பக அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags : Paramathivelur , An elderly man with bones at a government school near Paramathivelur
× RELATED போதையில் நண்பர்களுடன் எஸ்ஐயை தாக்கிய விஏஓ