×

கொரோனா தொற்றுக்கு 9,195 பேர் பலி: `இறந்தவர்களில் 90% பேர் தடுப்பூசி போடவில்லை’: கேரள சுகாதாரத்துறை தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த இரண்டரை மாதத்தில் கொரோனா பாதித்து 9195 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தி கொள்ளாதவர்கள் என்று சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே கடந்த பல வாரங்களாக கொரோனா பரவல் மிக அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. தினசரி நோயாளிகள் எண்ணிக்கையில் சுமார் 70 சதவீதம் பேர் கேரளாவில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தினமும் சராசரியாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது.

பல நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதன்படி புதிதாக 30,196 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது 17.63 சதவீதம் ஆகும். 181 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது. கேரளாவில் கடந்த இரண்டரை மாதத்தில் கொரோனா பாதித்து இறந்தவர்களில் 90 சதவீதத்திற்கு மேல், ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தி கொள்ளாதவர்கள் என்று சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் கடந்த ஜூன் 18 முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை கொரோனா பாதித்து 9195 பேர் மரணமடைந்து உள்ளனர். இதில் 905 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இது 9.87 சதவீதம் ஆகும். மொத்தமுள்ள இறப்பு எண்ணிக்கையில் 6200 பேர் ஏற்கனவே இதயம், சிறுநீரகம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இது 67.43 சதவீதம் ஆகும். இதையடுத்து மாநிலத்தில் தடுப்பூசி ெசலுத்தும் பணியை மேலும் தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Tags : Kerala Health Department Information , Corona Infection, Kerala Health Department, Information
× RELATED மக்களவை தேர்தலை ஒட்டி நாளை...