×

உடல் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் மாணவர், ஆசிரியர்களை பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது : பள்ளி கல்வி ஆணையர் உத்தரவு

வேலூர்:உடல் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து கடந்த 1ம்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 9 முதல் 12ம் வகுப்பு வரை அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.

மாணவ, மாணவிகளின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமை ஆசிரியர்கள் கீழ்காணும் இனங்கள் மீதும் கூடுதல் கவனம் செலுத்துமாறு பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் பள்ளிகளுக்குள் நுழையும்போதே உடல் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். உடல் வெப்பநிலை அதிகம் இருப்பின் அவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்காமல் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்திட வேண்டும்.
அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும். மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும்போது கிருமிநாசினி, சோப் கொண்டு கைகளை சுத்தம் செய்யவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, பள்ளி நேரங்களில் கூட்டம் சேராமல் போதிய இடைவெளியுடன் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். பள்ளிக்கு தொடர்பில்லாத நபர்கள் பள்ளிக்குள் நுழைவதை அனுமதிக்க வேண்டாம்.இந்த அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags : School Education Commissioner , உடல் வெப்ப நிலை
× RELATED ஆசிரியர்கள் பணியிட மாறுதல் தொடர்பான...