சென்னை: கோடநாடு வழக்கு, ஜெயலலிதா மரண வழக்கு தமிழ்நாட்டு மக்களை பெரும் குழப்பத்துக்கு ஆளாக்கி உள்ளது என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் கருத்து தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், காவல்துறை மீது கரும்புள்ளி ஏற்படும் வகையில் சாத்தான்குளம் சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு போன்ற சம்பவங்கள் நடைபெற்றிருப்பதை குறிப்பிட்டு பேசினார்.
அதேப்போல் கடந்த காலங்களில் ஜெயின் பறிப்பு சம்பவங்களும், மகளிர் வெளியே செல்லாமல் முடங்கி கிடைக்கக்கூடிய சூழலும், கூலிப்படை வைத்து கொலை செய்வதும் தொடர்கதையாக நடந்து கொண்டிருப்பதையும் குறிப்பிட்டு பேசினார். அச்சமயம் கோடநாடு வழக்கு, ஜெயலலிதா மரண வழக்கு தமிழ்நாட்டு மக்களை பெரும் குழப்பத்துக்கு ஆளாக்கி உள்ளது என்று தெரிவித்தார். திமுக உறுப்பினர் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை அவையில் பேசுவது மரபு அல்ல என குறிப்பிட்டார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, வழக்கு விவரத்தை சுதர்சனம் பேசவில்லை; வழக்கு நடைபெறுவதை தான் பேசுகிறார். வழக்கில் யார் மீது சந்தேகம் இருக்கிறது என்பது பற்றி எல்லாம் பேரவையில் பேசவில்லை; அந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளார். கோடநாடு பற்றிய திமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் பேச்சை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.