கொடைக்கானல்: நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கொடைக்கானலில் ரம்புட்டான் பழங்கள் தேக்கமடைந்துள்ளன.கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வவ்வால் கடித்த ரம்புட்டான் பழத்தை உண்ட சிறுவன் பலியானதாக தெரிகிறது. இவனுடைய பெற்றோருக்கும் நிபா வைரஸ் அறிகுறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கேரளாவில் ரம்புட்டான் பழ விற்பனைக்கு அம்மாநில சுகாதாரத்துறை தடை விதித்து உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ரம்புட்டான் பழங்கள் விற்பனை நடந்து வந்த நிலையில், தற்போது நிபா வைரஸ் அச்சுறுத்தலால் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் இப்பழங்களை வாங்குவதை தவிர்க்கின்றனர். இதனால் கொடைக்கானலில் ரம்புட்டான் பழங்கள் தேக்கமடைந்து உள்ளதால், பல வியாபாரிகள் அவதி அடைந்து உள்ளனர். இதனால் கிலோ ரூ.250க்கு விற்ற நிலையில், தற்போது இப்பழம் ரூ.100 முதல் ரூ.150க்கு கூட வாங்க ஆளில்லாமல் இருப்பதாக பழ வியாபாரிகள் கூறுகின்றனர்.
வியாபாரிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் ரம்புட்டான் பழங்கள் குற்றாலம், ஊட்டியில் இருந்து மகசூல் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் ரம்புட்டான் பழங்களை வவ்வால்கள் கடிக்காத வண்ணம் மரங்களில் வலை விரித்து பாதுகாக்கப்பட்டு பின்னர் அறுவடை செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஆனால் கேரளாவில் இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படாத காரணத்தினால் வவ்வால்கள் ரம்புட்டான் பழங்களை சாப்பிட்டு நிபா வைரஸ் பரவியிருக்கும் என கூறுகின்றனர். எனவே தமிழகத்தில் ரம்புட்டான் பழங்களை ஆய்வு செய்து விற்பனை செய்ய அனுமதிக்க அரசும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.