சென்னை: சென்னையைச் சேர்ந்த இல.கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கு, தமிழக அரசு விதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்சம் ஐந்து பேராவது அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு மத உரிமைகளை பின்பற்ற வாழ்வாதார உரிமை முக்கியமானது. பொதுநலன் கருதியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.