சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று ஆதிதிராவிடர், சிறுபான்மையினர் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பாபநாசம் தொகுதி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசியதாவது: பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லிம்களுக்கு 3.5% இடஒக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். நீண்ட காலமாக நாங்கள் வைத்த கோரிக்கை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு, 2007 செப்டம்பர் 13ம் நாள் அளிக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு கடந்த 10 ஆண்டுகளாக சரியான முறையில் கடைபிடிக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை, 5 சதவீதமாக உயர்த்தித் தர வேண்டும்.