×

பவானிபூர் தொகுதி இடைத்தேர்தல்: நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி..!

கொல்கத்தா: பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட நாளை 10-ம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இதில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க. வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.  

இதனையடுத்து, தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றதால், மம்தா பானர்ஜி முதல்வரானார். 6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்க வேண்டும் என்ற சூழலில், மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதில், பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி, ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகீர் ஹூசைன், சாம்செர்காஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குப்பதிவு நடந்த விதம் கடவுளுக்கு மட்டுமே தெரியும். ஒன்றிய அரசு பொய் கூறியது. இன்னும் என்னை வெல்ல முடியவில்லை. நந்திகிராமில் என் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னால் சதி இருந்தது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட நாளை 10ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Tags : Mamta Banerjee , Bhavanipur constituency, by-election, nomination, Chief Minister Mamata Banerjee
× RELATED பாஜவில் சேராவிட்டால் கைது செய்வோம்...