பெங்களூரு: நிபா வைரஸ் பரவல் காரணமாக கேரள பயணத்தை தவிர்க்க வேண்டும் என அம்மாநில மக்களை கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகைகளுக்கு பின்னர், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அது ஒரு புறம் பிரச்சினை என்றால், அங்கு நிபா வைரஸும் பரவ தொடங்கியுள்ளது. கோழிக்கோடு அருகே 12 வயது சிறுவன் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளான். இதனால் கேரளாவில் அண்டை மாநிலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, சுவாசக் கோளாறு, இருமல், வாந்தி, தசை வலி போன்ற அறிகுறிகளுக்காக கேரளாவிலிருந்து வருபவர்களை கண்காணிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்துகிறது. மேலும் கேரளாவில் இருந்து வருபவர்களை கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து உரிய பாதுகாப்புடன் ரத்த மாதிரிகளை சேகரித்து புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அக்டோபர் மாதம் இறுதி வரை கேரள பயணத்தை தவிர்க்க வேண்டும் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை பரப்பவும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளதால் அவசர காரங்கள் இல்லையெனில் பயணங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.