காபூல் : சர்வதேச பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டு அமெரிக்காவால் 5 மில்லியன் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்த சிராஜுதீன் ஹக்கானி ஆப்கானிஸ்தானின் புதிய உள்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க படை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய ஒரு வாரத்திற்கு பின் தாலிபான்கள் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்க உள்ளது. தாலிபான்களின் அமைச்சரவையில் தாலிபான்கள் அல்லாத வேறு யாருக்கும் இடம் அளிக்கப்படவில்லை. முல்லா அப்துல்லா முகமது ஹசன் அகுந்த் இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். முல்லா அப்துல் கனி பரதர் மற்றும் முல்லா அப்துல் ஸலாம் ஆகியோர் துணை பிரதமர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிராஜுதீன் ஹக்கானி ஆப்கனின் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருப்பது சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தாலிபான் நிறுவனர் முல்லா முகமது ஓமரின் மகன் முல்லா முகமது யகூப் [பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.அமிர்கான் முட்டாகி வெளியுறவு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் தாலிபான்களின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்ட ஜபிஹுல்லா முஜாஹித் தகவல் தொடர்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் தான் தாலிபான்கள் நடத்தும் தற்கொலைப் படை தாக்குதலுக்கு பொறுப்பேற்று ட்விட்டரில் தகவல்களை வெளியிட்டு வந்தார்.