சென்னை: சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது குமாரபாளையம் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.தங்கமணி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் பேசிக்கொண்டிருந்த மைக் செயல்படவில்லை. இதைத் தொடர்ந்து பக்கத்தில் உள்ள மைக்கில் சபாநாயகர் அப்பாவு பேச சொன்னார். அப்போது பக்கத்தில் உள்ள மைக்கும் செயல்படவில்லை. மேலும் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட அனைத்து உறுப்பினர்களும் எங்கள் மைக்கும் செயல்படவில்லை என்று கூறினர். சபாநாயகர் அப்பாவு மைக் மட்டும் இயங்கியது. அப்போது சபாநாயகர் அப்பாவு “எலக்ட்ரானிக் பொருட்கள் என்றாலே பிரச்னை தான்” என்றார். இதனால், அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. 2 நிமிடத்திற்கு பிறகு மைக்குகள் வழக்கம் போல் இயங்கின. அதன் பிறகே உறுப்பினர்கள் பேச தொடங்கினர்.