பிரகாசம்: ஆந்திராவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 11 பெண்களிடம் 3 கோடி ரூபாய் வரை வசூலித்த நபரை போலீசார் கைது செய்தனர். மேட்ரிமோனி தளத்தை பயன்படுத்தி இளம்பெண்களிடம் மோசடி செய்து பண சம்பாதிக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. படித்த இளைஞர்கள் போலி வெப்சைட்களை உருவாக்கியும் அல்லது ஏற்கனவே உள்ள மேட்ரிமோனி சைட்களை பயன்படுத்தியும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக படித்து நல்ல வேலையில் இருக்கும் பெண்கள், விவாகரத்து ஆன நிலையில் மறுமணம் செய்ய காத்திருக்கும் பெண்களை குறிவைத்தே இதுபோன்ற மோசடிகள் அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திராவில் திருமணம் செய்து கொள்வதாக 11 பெண்களிடம் நிதி மோசடி செய்த காதல் மன்னன் கைது செய்யப்பட்டுள்ளான். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் செட்டிகாலபூடி கிராமத்தை சேர்ந்த புன்னட்டி சீனிவாஸ், திருமணப்பதிவு இணையதளங்களில் தனது விவரங்களை பதிவிட்டு அதிகம் சம்பாதிக்கும் பெண்களை குறிவைத்து நண்பன் போல் பழகி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இதுபோன்று 11 பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
கொரோனா காலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகக்கூறி, இந்த 11 பெண்களிடம் இருந்தும், சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை பெற்றுள்ளார். சீனிவாஸ் தங்களை ஏமாற்றியதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண்கள், இதுகுறித்து சித்தூர் மாவட்டம் நரசிங்கராயப்பேட்டை, மதனப்பள்ளி காவல்நிலையங்களில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சீனிவாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீனிவாஸ் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.