வருசநாடு : கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடமலை மயிலை ஒன்றியத்தில் பஞ்சம்தாங்கி கண்மாய், பெரியகுளம், செங்குளம், கெங்கன்குளம், கோவிலாங்குளம் கடமான்குளம், சிறுகுளம், கோவில்பாறை கண்மாய், சாந்தநேரி கண்மாய் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களில் அதிக அளவில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து தென்னை, இலவமரம், கொட்டை முந்திரிமரம், எலுமிச்சை உள்ளிட்டவற்றை பயிர் செய்து வருகின்றனர். இதனால் கண்மாய்களில் நீர்தேக்குவதில் தடை ஏற்பட்டுள்ளது.
மேலும் கண்மாய்கள் தூர்வாராமல் புதர்மண்டி கிடக்கிறது. எனவே கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டும் குடிநீர் பஞ்சம் பொதுமக்களுக்கு எப்போதும் வராது. விவசாயம் பாதிக்கப்படாது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.