×

திருவாரூர் அருகே நன்னிலத்தில் ரத்த மாதிரியுடன் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த சிரிஞ்சுகள்-சுகாதாரத்துறையினர் விசாரணை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் சாலையோரம் ரத்த மாதிரியுடன் கூடிய சிரிஞ்சுகள் கொட்டப்பட்டிருந்தது தொடர்பாக சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா திருக்கண்டீஸ்வரம் என்ற இடத்தில் சாலையோரத்தில் ரத்த மாதிரி உடன் கூடிய சிரிஞ்சுகள் (ஊசிகள்) கிடந்தது தொடர்பாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து நன்னிலம் சுகாதாரத் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியதில் தனியார் மருத்துவமனை அல்லது தனியார் ரத்த பரிசோதனை நிலையங்கள் மூலமாக இதுபோன்ற ரத்த மாதிரி எடுக்கப்பட்ட சிரிஞ்சுகள் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்ததன் பேரில் நன்னிலம் பகுதி முழுவதும் இருந்துவரும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ரத்த பரிசோதனை நிலையங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் செல்வகுமாரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட இடத்தில் கொட்டப்பட்டுள்ள சிரிஞ்சுகள் அரசுக்கு சொந்தமான சிரிஞ்சிகள் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடந்து வரும் நிலையில் இது போன்று சிரிஞ்சுகள் யார் மூலம் கொட்டப்பட்டன என தெரியவரும். அதன் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags : Nannilam ,Thiruvarur , Thiruvarur: Sanitation related to the dumping of syringes with blood sample on the roadside in Nannilam, Thiruvarur district.
× RELATED அனல் பறக்கும் பிரசாரத்தில்...