சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர் ஊரமைப்பு இயக்ககம், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப 28 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 34 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 49 பணியாளர்கள் உட்பட 303 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில், வழங்கிடும் அடையாளமாக, 7 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் முத்துசாமி, தா.மோ.அன்பரசன், சக்கரபாணி, செந்தில் பாலாஜி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹிதேஸ்குமார் எஸ். மக்வானா, எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராஜாராமன், நகர் மற்றும் ஊரமைப்புத் துறை இயக்குநர் சரவணவேல்ராஜ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ்,கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.