×

கினியா நாட்டின் அதிபரை துப்பாக்கி முனையில் கைது செய்து ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் : ஐ.நா.கடும் கண்டனம்!!

கோனாக்ரி: கினியா நாட்டின் அதிபர் ஆல்பா காண்டே துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளதால், அந்நாட்டில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா, கடந்த 1958ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிடமிருந்து விடுதலை பெற்றது. அந்நாட்டில் 2010ம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்பா காண்டே (83) வெற்றி பெற்று அதிபரானார். தொடர்ந்து அதிபராக இருந்த அவர், 3வது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார். ஆனால், அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவரது ஆட்சி காலத்தில், அலுமினிய தாது பொருட்கள் ஏற்றுமதியால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று தலைநகர் கோனாக்ரியில் உள்ள அதிபர் மாளிகை அருகே திடீரென துப்பாக்கிச்சூடு சப்தம் தொடர்ந்து கேட்டது. இதையடுத்து, அரசுத் தொலைக்காட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ராணுவ கர்னல் மமாடி டம்போயா, அதிபர் ஆல்பா காண்டே தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதாக திடீரென அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘அரசாங்கத்தை ஒரு தனி நபரிடம் ஒப்படைக்க இனியும் தாங்கள் விரும்பவில்லை. அரசை மக்களே வழிநடத்துவார்கள். நாட்டைக் காப்பற்ற வேண்டியது ஒவ்வொரு ராணுவ வீரனின் கடமை’ என அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அதிபரின் நிலை குறித்து எதுவும் அவர் தெரிவிக்கவில்லை. ஆனால், அதிபர் ஆல்பா காண்டே சிறைவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘துப்பாக்கியின் பலத்தால் அரசாங்கத்தைக் கைப்பற்றுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதற்கிடையே, ராணுவத்தின் ஒரு பிரிவினரின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கினியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதிபரின் நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவிக்காத நிலையில், அங்கு குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஏஎப்பி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘கினியா நாட்டின் சிறப்புப் படைகள் அதிகாரத்தைக் கைப்பற்றியது. நாட்டின் அதிபரை கைது செய்துள்ளனர். காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சி கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.



Tags : Guinea ,president ,UN , Guinea, Chancellor, Alpha Conte, gunpoint, arrested
× RELATED பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்!