வாணியம்பாடி : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்ரோட்டில் இருந்து திம்மாம்பேட்டை செல்லக்கூடிய சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இவ்வழியாக பயணம் செய்யும் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும், அரசு அதிகாரியிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.