×

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

நாமக்கல் : நாமக்கல்லில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கி பாராட்டினார்.  ஆசிரியர் தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பள்ளி கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய 10 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார்.

இதில், நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் செல்லதுரை, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் குமரேசன், அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மாதேஸ்வரன், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திருவருள் செல்வன், ரெட்டிப்பட்டி பாரதி மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் நாராயணமூர்த்தி, புதுச்சத்திரம் ஒன்றியம் காரைக்குறிச்சி துவக்கப்பள்ளி ஆசிரியர் லதா, கொல்லிமலை ஒன்றியம் சோலுடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவம், மோகனூர் ஒன்றியம் ஒருவந்தூர்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை, திருச்செங்கோடு காளிப்பட்டி மகேந்திரா மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆனந்த் என 10 ஆசிரியர்களுக்கு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டினார்.

அப்போது, அவர் பேசுகையில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் சமுதாயத்திற்கு பல்வேறு நன்மைகள் செய்துள்ளார். திமுக ஆட்சி காலத்தில் தான் ஆசிரியர்களின் நலன் காக்கப்படுகிறது,’ என்றார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, நாமக்கல் எம்பி சின்னராஜ், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்ரமணியம், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Namagal District , Namakkal: Minister Mathiventhan presented the Best Author Award to 10 teachers in Namakkal. On Teacher's Day, Namakkal
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...