அணைக்கட்டு : அணைக்கட்டு அடுத்த வல்லண்டராமத்தில் கால்வாய்கள் இல்லாததால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளுக்குள் கூட செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அணைக்கட்டு ஒன்றியம், வல்லண்டராமம் கிராமத்தில் 100க்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் அணைக்கட்டிற்கு செல்லவும், வல்லண்டராமத்தில் இருந்து செதுவாலை தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் நெடுஞ்சாலை துறை சார்பில் பல ஆண்டுகளுக்கு முன் தார்சாலை போடப்பட்டது.
இந்நிலையில், இந்த சாலையில் பொற்கொடியம்மன் கோயில் தெருவில் இருந்து செதுவாலை தேசிய நெடுஞ்சாலை வரை செல்லும் வழியில் மழைநீர் வெளியேற வழியில்லாததால் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமலும், வீட்டில் இருந்து வெளியில் வர முடியாமலும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைத்து மழைநீர் வெளியேற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.