திண்டுக்கல் : தினகரன் செய்தி எதிரொலியால் திண்டுக்கல்லை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நிவாரணம் குவிந்து வருகிறது.திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புளியராஜக்காபட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் காளியப்பன்(56). இவரது மனைவி மகாலட்சுமி காளியப்பன் கொய்யா பழம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளனர்.
இதில் கோவையில் குழந்தை உடல் வளர்ச்சி, மனவளர்ச்சியின்றி பெண் குழந்தை பிறந்தது. அதற்கு சுதா எனப்பெயரிட்டனர். 25 வயதில் தாயாக வேண்டிய சுதா, தற்போது இரண்டு வயது குழந்தை போல் உள்ளார். அவரால் நடக்கவோ, வெகுநேரம் உட்காரவோ முடியாது, வாய் பேச வராது, காது கேட்காது. சுதாவால் பேச முடியாது என்பதால் கை ஜாடையில் தான் வேண்டியதை கேட்பார். 24 மணி நேரமும் இந்தக் குழந்தையை கண்காணிப்பதற்காக அருகே ஒருவர் இருந்தாக வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு மகாலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மேலும் காளியப்பன் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதனால் குழந்தை சுதாவை பார்த்துக்கொள்ள வீட்டில் வேறு யாரும் இல்லாத காரணத்தினால் தற்பொழுது காளியப்பன் அருகிலிருந்து தனது மகளை பார்த்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் பார்த்து வந்த கொய்யாப்பழம் விற்பனை செய்யும் தொழிலையும் விட்டுவிட்டு குழந்தையுடன் 24 மணி நேரமும் இருந்து வருகிறார். இவரது மகன் கார்த்தி மணி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். குடும்பத்திற்கு வருமானம் தேவைப்படுகின்ற காரணத்தினால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு தற்பொழுது கூலி வேலைக்கு சென்று வருகிறார். தனது மகன் கார்த்தி மணியின் வருமானம் சுதாவிற்கு அரசாங்கம் வழங்கக்கூடிய மாற்றுத்திறனாளிக்கான மாதத்தொகை 1000 ரூபாயைவைத்து குடும்பத்தை ஓட்டி வருகிறார்.
போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் சுதாவிற்கு மருத்துவ செலவு செய்வதற்கோ சத்தான உணவு வாங்கி கொடுப்பதற்கு கூட காளியப்பனால் செலவு செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. தற்பொழுது குடும்பத்தை நடத்துவதற்கு போதிய வருமானம் இல்லாமல் காளியப்பன் தவித்து வருகிறார்.
இந்நிலையில் இதுதொடர்பான செய்தி தினகரனில் வெளியானது. இதன் எதிரொலியாக, மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளி சுதாவிற்கு நிவாரண தொகையை 1000ல் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளது. மேலும் இந்தச் செய்தி தினகரன் நாளிதழை பார்த்த ஈரோட்டை சேர்ந்த புவனேஷ்குமார் தனியார் தாய்மை அறக்கட்டளை சார்பாக பாதிக்கப்பட்ட பெண் சுதாவிற்கு 15 ஆயிரத்து 500 ரூபாய் மொத்தமாக வழங்கியுள்ளார். மேலும் மாதம் மாதம் ரூ.2000 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.