×

ஆப்கனில் திடீர் திருப்பம் : தலைவர்கள் கொலை, பணிந்தது தேசிய கிளர்ச்சிப் படை... பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் கைப்பற்றிய தாலிபான்கள்!!

காபூல் : ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு படை வசமிருந்த பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றினர்.பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய எதிர்ப்பு படையினர் போர் நிறுத்தம் அறிவித்த நிலையில், தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கன் தலைநகர் காபூல் உள்ளிட்ட 33 மாகாணங்களை கைப்பற்றி 20 நாடுகள் கடந்துவிட்ட நிலையில், அவர்களால் பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அங்குள்ள தாலிபான் எதிர்ப்பு படையினர் பெரும் சவாலாக இருந்தனர்.மறைந்த முன்னாள் ஆப்கானிஸ்தான் தளபதி அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி அம்ருல்லா சலேஹ் ஆகியோரின் தலைமையிலான தேசிய கிளர்ச்சிப் படை தாலிபான்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தினர்.

தாலிபான்கள் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் நடத்தி வந்த தாக்குதலில் எதிர் படையின் செய்தித் தொடர்பாளரும் பிரபல பத்திரிகையாளருமான ஃபஹீம் தஷ்டியை  கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மற்ற முக்கிய தலைவர்களான குல் ஹைதர் கான், மமுனீப் அமிரி, வதூத், அஹமது ஷா மசூத்தின் உறவினர் உட்பட பலர் பலியாகிவிட்டனர். உக்கிரமாக நடந்து வரும் சண்டையினால் இரு தரப்பிலும் அதிகளவில் உயிர் சேதம் ஏற்பட்ட வந்த நிலையில், அமைதி பேச்சுவார்த்தையை தொடங்குமாறு, இஸ்லாமிய அறிஞர்கள் இரு தரப்பிற்கும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை ஏற்று சண்டை நிறுத்தத்திற்கு தயார் என தாலிபான் எதிர்ப்பு படை தலைவர் அகமது மசூத் தமது அமைப்பின் முகநூல் பக்கத்தில் அறிவித்தார்.தாலிபான்கள் பஞ்ச்ஷிர், அந்தராப் ஆகிய பகுதிகளில் மேற்கொண்டு வரும் ராணுவ தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தால் சண்டையை நிறுத்தத் தயாராக இருப்பதாக மசூத் அதில் தெரிவித்து இருந்தார்.

மேலும் தங்கள் பகுதியை சுதந்திரமாக விட்டுவிட வேண்டும், தாலிபான்கள் அத்துமீற கூடாது. கூடுதல் அதிகாரத்துடன் எங்கள் பகுதியில் சிறப்பு ஆட்சி அதிகாரத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தேசிய கிளர்ச்சி படை தாலிபான்களுக்கு கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. இதனை ஏற்றுக் கொண்ட தாலிபான்கள், பஞ்ச்ஷீர் தலைநகரில் தலிபான் அமைப்பின் கொடியும் ஏற்றினர். அத்துடன் , பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்மூலம், ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களும் தலிபான்கள் வசமானது. .

Tags : Afkon ,Talibans ,Punjshir Province , ஆப்கானிஸ்தான், தேசிய எதிர்ப்பு படை
× RELATED ஆப்கனை எளிதாக வென்றது இந்தியா