சென்னை: புளியந்தோப்பு காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் கோபிநாத் (54). எஸ்ஐயான இவர், நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இதுபற்றி அறிந்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எஸ்ஐ கோபிநாத் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்தநிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று காலை கோபிநாத் வீட்டுக்கு சென்று, அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் கோபிநாத்தின் மனைவி காந்திமதி, அவரது மகள் லக்ஷா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது காந்திமதி, டிஜிபியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். பின்னர், நேற்று மாலை ஓட்டேரி மயானத்தில் 21 குண்டுகள் முழங்க கோபிநாத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், கூடுதல் கமிஷனர் கண்ணன், புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா, உதவி கமிஷனர் அழகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.