×

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேரன் கேசவ் தேசிராஜு சென்னையில் காலமானார்

சென்னை: சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை செயலாளருமான கேசவ் தேசிராஜு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66. சென்னையில் பிறந்த இவர் தொடக்கக்கல்வியை டேராடூனிலும், உயர்கல்வியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். இந்திய குடிமையியல் தேர்வில் தேர்ச்சி பெற்ற கேசவ், மத்திய சுகாதார துறை செயலாளராக பதவி வகித்துள்ளார். மனநல சுகாதார சட்டம் கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தவர்.

அடையாறு புற்றுநோய் மையத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தவர். 2018ல் இவர் எழுதிய இந்திய சுகாதார அமைப்பின் ஊழல் எனும் புத்தகம் பரவலாக பேசப்பட்டது. ஓய்வுபெற்ற கேசவ் தேசிராஜு, சென்னையில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். இதய நோயால் பாதிக்கப்பட்ட கேசவ் தேசிராஜு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகள் வழி பேரன் கேசவ தேசிராஜு என்பது குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலின் இரங்கல்: முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘கேசவ் தேசிராஜு மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். அரசுப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சியில் முக்கியப்  பங்காற்றிய அவர் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று  நூலையும் எழுதியுள்ளார். மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோர் நலனில் தனித்த அக்கறை கொண்டிருந்த மனிதநேயப் பண்பாளராகவும் திகழ்ந்தார். தமது பாட்டனாரின் பிறந்தநாளிலேயே மறைவெய்தியுள்ள அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

Tags : Former President ,Radhakrishnan ,Keshav Desiraju ,Chennai , Former President Radhakrishnan's grandson Keshav Desiraju has passed away in Chennai
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்