ஓவல்: 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்தது. முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்தது. இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி இந்திய அணியைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்து இருந்தது. 3 ஆம் நாளான நேற்று சிறிது நேரம் தாக்குப் பிடித்த கேஎல் ராகுல் 46 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா சதம் விளாசினர். ரோகித் சர்மாவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த புஜாராவும் அரைசதம் விளாசினார். இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 466 ரன்கள் குவித்தது. இதனால், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்தை விட 367 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் கிறிஸ் வோக்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து, 368 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கி விளையாடி வருகிறது.கேப்டன் விராட் கோலி 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மொயீன் அலி பந்து வீச்சில் வெளியேறினார்.