பாரா ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் அவனி லெகராவை தொடர்ந்து இந்திய வீரர் மனிஷ் நர்வால் புதிய சாதனையுடன் தங்கம் வென்று அசத்த, நடப்பு தொடரில் சிங்ராஜ் தனது 2வது பதக்கத்தை முத்தமிட்டார். ஆண்கள் 50 மீட்டர் பிஸ்டல் எஸ்எச்1 துப்பாக்கி சுடும் (பி4) போட்டியில் நேற்று நடந்த தகுதிச் சுற்றில் இந்திய வீரர்கள் சிங்ராஜ் அதானா, மனிஷ் நர்வால், ஆகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். அதில் 536 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்த சிங்ராஜ், 533புள்ளிகளுடன் 7வது இடம் பிடித்த மனிஷ் உட்பட 8 பேர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
மற்றொரு இந்திய வீரர் ஆகாஷ் 507 புள்ளிகளுடன் 27வது இடம் பிடித்ததால் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து நடந்த பைனலில் 218.2 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்த மனிஷ் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றதுடன், இந்த பிரிவில் அதிக புள்ளிகள் குவித்து புதிய பாரா ஒலிம்பிக் சாதனையையும் படைத்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம் அல் அய்னில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் அவர் 229.1 புள்ளிகள் குவித்து உலக சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சிங்ராஜ் 216.7 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். நடப்பு பாரா ஒலிம்பிக்சில் சிங்ராஜ் பெறும் 2வது பதக்கம் இது. ஏற்கனவே அவர் 10 மீ. ஆடவர் ஏர் பிஸ்டல் (பி1) துப்பாக்கிசுடும் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.