×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், யானையை தத்தெடுத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்

கூடுவாஞ்சேரி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் யானையை நடிகர் சிவகார்த்திகேயன் 6 மாத காலத்துக்கு தத்தெடுத்துள்ளார் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2,452 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெரிய பூங்காக்களில் இதுவும் ஒன்று, பார்வையாளர்களாக வந்து விலங்குகளை பார்பதோடு மட்டுமல்லாமல், இங்குள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக இப்பூங்கா, விலங்கு தத்தெடுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.  

இதன் மூலம் விலங்குகளை தத்தெடுப்பவர் எந்த விலங்கின் மீது ஆர்வம் உள்ளதோ அதற்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவினை அன்பளிப்பாக அளிக்கலாம். இவ்வாறு அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்றவாறு வரி விலக்கு மற்றும் பூங்காவினை இலவசமாக சுற்றிப் பார்ப்பது போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பூங்காவிலுள்ள விஷ்ணு என்ற ஆண் சிங்கத்தையும், பிரகுர்த்தி என்ற பெண் யானையையும் 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார். இது அவருடைய விலங்குகளின் மீதான அக்கறை மற்றும் ஆர்வத்தை அடையாளப்படுத்துகிறது. ஏற்கனவே, சிவகார்த்திகேயன் கடந்த 2018ம் ஆண்டு அனு என்ற வெள்ளை புலியை தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Sivakarthikeyan ,Vandalur zoo , Actor Sivakarthikeyan adopts lion and elephant at Vandalur zoo
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்று சுவர் இடிப்பு