×

நெசவாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பஞ்சு, கழிவு பஞ்சு மீது 1% வரி ரத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நெசவாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பஞ்சு, கழிவு பஞ்சு மீது ஒரு சதவீதம் வரி ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நெசவாளர்களின் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளையும், நலத் திட்டங்களையும் வழங்கியது திமுக அரசு. அதன் தொடர்ச்சியாக, இப்போது நெசவுத் தொழிலை நம்பியிருக்கக்கூடிய நெசவாளர்கள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஓர் முக்கிய அறிவிப்பினை, 110 விதியின்கீழ் வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ்நாடு வேளாண் பொருட்கள் விற்பனை (ஒழுங்குமுறை) சட்டம் 1987, பிரிவு 24ன்படி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சின் விற்பனை மதிப்பு மீது சந்தை நுழைவு வரியாக 1 விழுக்காடு விதிக்கப்படுகிறது. மேற்படி சட்டத்தின்படி, பருத்தி பொதி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஆகியவை வேளாண் பொருட்களாகக் கருதப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள சந்தைப் பகுதிகளில் கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்படும் பொழுது 1 விழுக்காடு வரி (சந்தைக் கட்டணம்) விதிக்கப்படுகிறது. சந்தை நுழைவு வரி என்பது, பருத்திப் பொதிகள் மீது மட்டுமே விதிக்கப்பட வேண்டும். மாறாக, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு போன்ற உற்பத்தி பொருட்கள் மீதும் 1 விழுக்காடு சந்தை நுழைவு வரி விதிக்கப்படுகிறது.

இதனால் வெளி மாநிலங்களிலிருந்து பஞ்சு கொள்முதல் செய்யப்படும் பொழுது சிறு, குறு நூற்பாலைகள் போக்குவரத்துக் கட்டணம் செலுத்துவதிலே பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பஞ்சின்மீது விதிக்கப்படும் சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டுமென்பது தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நெடு நாள் கோரிக்கையாக இருக்கிறது. மாநிலத்தில் இந்தியப் பருத்திக் கழகம் பஞ்சு நூல் விற்பனையை மேற்கொள்ளும்பொழுது, நூற்பாலைகள் பெரிய அளவிலான பஞ்சு இருப்பினைப் பராமரிக்க வேண்டியதில்லை.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நெசவாளர்களுடன் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டங்களில், இந்த வரியினை நீக்க வேண்டுமென்று தங்களது கோரிக்கையாக அவர்கள் தெரிவித்தனர். இதனைக் கருத்திற்கொண்டு, தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று பஞ்சு, கழிவுப் பஞ்சு மீதான ஒரு விழுக்காடு வரி (சந்தைக் கட்டணம்) ரத்து செய்யப்படுகிறது. இதற்கான உரிய சட்டதிருத்தம் இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலே கொண்டு வரப்பட இருக்கிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags : Q. Stalin , 1% tax on cotton, waste cotton abolished in response to long-standing demand of weavers: Chief Minister MK Stalin's announcement
× RELATED அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள்,...