×

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்த பேச்சு: எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்: சட்டப்பேரவையில் பரபரப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டப்பேரவையில் இன்று இந்து அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, தொழிலாளர் நலன்துறை ஆகிய மானியக்கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் கும்பகோணம் அன்பழகன்(திமுக) பேசியதாவது: இங்கு சட்டமன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைபெற்ற ஒன்றிரண்டு சம்பவங்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். கண்ணுக்கு தெரிகிற தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆவேசமாக சட்டமன்றத்தில் பேசியவர்களை பார்த்தோம். எங்கே உங்கள் தளபதி? எந்த போர்ப்படைக்கு அவர் தளபதி என்றெல்லாம் அவர்கள் பேசினார்கள். ஆனால் இன்று தமிழகத்திற்கே போர்ப்படை தளபதியாக இருந்து இங்கு, அமைதியாக, அனைவரும் விரும்புகிற, கவுரவம் இல்லாமல் அமைதியான தளபதியாக அமர்ந்திருக்கிறார். இன்னொரு குரலும் அடிக்கடி ஒலிக்கும். ஒலிபெருக்கியை கண்டாலே இவர்போய் பேசுவார். நகைச்சுவை என்ற பெயரில், அனைவரையும் விமர்சனம் செய்து வந்தார். ஸ்டாலின் வெற்றி பெறவே முடியாது என்று கூறியதுடன், வேண்டும் என்றே முதலில் ராயபுரம் தொகுதியில் என்னை(ெஜயக்குமார்) வெற்றி பெறட்டும் என்று கூறினார்.

ஆனால் இன்று அவர் முகத்தை இந்த மன்றத்தில் தேடிப்பார்க்கிறேன். ஆனால் அந்த முகத்தை காணமுடியவில்லை. ஆனால் எங்கள் தலைவர், சரியான ஒரு வேலை செய்தார். யாருக்கும் அறிமுகம் இல்லாத, ஐட்ரீம்ஸ் மூர்த்தியை ராயபுரம் தொகுதியில் போட்டியிட வைத்தார். இன்று இந்த மன்றத்தில் அவர் முகத்தை காண்கிறேன். ஆனால், சவால் விட்டவர் முகம் தெரியவில்லை. அப்போது(ஐட்ரீம்ஸ் மூர்த்தி வணக்கம் போடுதல். அப்போது திமுக உறுப்பினர்கள் மேசையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்). முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஏற்கனவே சபாநாயகர் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர் 15 நிமிடம் மட்டுமே பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். எனவே அருள் கூர்ந்து, நமது உறுப்பினர் அன்பழகன், மானியக்கோரிக்கைக்கு வாருங்கள் அது பற்றி பேசுங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி: உறுப்பினர் அவையில் இல்லாத ஒருவர் பற்றி பேசுகிறார். அதேபோன்று 2017ம் ஆண்டு நடந்த சம்பவம் பற்றி சொன்னாலும் நன்றாக இருக்கும். முதல்வர் மு.க.ஸ்டாலின்: உறுப்பினரிடம் நானும், நேரத்தை வீணாக்காதீர்கள் என்று கட்டுப்படுத்தி சொல்லியிருக்கிறேன். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அது பற்றி பேசினால், நாங்களும் பேசத் தயாராக இருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி: 2017ம் ஆண்டு அதிமுக பெரும்பான்மை உறுப்பினர்களுடன், ஆளுநர் எனக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஆளுநர் சட்டமன்றத் தலைவருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது என்ன நடந்தது என்றும், உறுப்பினர் குறிப்பிட வேண்டும்.

சபாநாயகர் அப்பாவு: நீங்கள் என்ன நினைத்தீர்களோ? அப்படித்தான் முதல்வரும் நினைத்து உறுப்பினரை மானியக்கோரிக்கை மீது மட்டும் பேசுங்கள் என்றார். உண்மையில் முதல்வருக்கு நீங்கள் நன்றிதான் சொல்லியிருக்க வேண்டும். அவை முன்னவர் துரைமுருகன்: இந்த விவாதத்தை நாகரீகமாக கொண்டு செல்ல வேண்டும் என்றுதான் முதல்வர் கூறினார். அதோடு முடித்திருக்கலாம். அதனால் சுமூகமாக அவையை நடத்த அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : Former Minister ,Jaikumar ,First Minister ,Edapadi Tannichami ,BC ,Q. ,Stalin , Chief MK Stalin, Legislature
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...