×

மாஜி அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது 150 பக்கம் ஊழல் ஆவணங்கள்: லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் சமர்ப்பிப்பு

கோவை: கோவையில் மாஜி அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது 150 பக்கம் ஊழல் தொடர்பான ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ளன. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரகுநாத். சினிமா படம் தயாரிப்பாளர். திமுக.,வை சேர்ந்த இவர் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ரூ.1,500 கோடி வரை ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்திருந்திருந்தார். இதனிடையே சென்னை, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள், நண்பர்கள் என அவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்கள் மற்றும் லாக்கர் சாவி பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு குனியமுத்தூரில் உள்ள வங்கியில் எஸ்.பி. வேலுமணி வங்கி லாக்கரில் சென்னையிலிருந்து வந்த அதிகாரிகள் ரகசியமாக சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையே ரகுநாத் மீண்டும் மாஜி அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது பரபரப்பு ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கோவை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ளாட்சி துறையில் நடந்த ஊழல் தொடர்பாக 150 பக்கம் கொண்ட ஆவணங்களை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் ரகுநாத் இன்று சமர்ப்பித்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் சினிமா பட தயாரிப்பாளர் ரகுநாத் கூறுகையில், ‘எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், பினாமிகள் உள்ளிட்டோர் மக்களின் வரிப்பணத்தை சுரண்டி கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர்.

வரிப்பணம் அரசாங்க திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர தனிநபர் ஆதாயம் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் துரித நடவடிக்கை எடுத்து வருகிறார். எஸ்.பி வேலுமணி மீது 150 பக்க ஊழல் தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளேன். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’. என்றார்.

Tags : Maji Minister ,S. B Valencia , Former Minister, S.P. Velumani, Corruption
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அளித்த...