உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்தனர். உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் கடந்த சில ஆண்டுகளாகவே வாரத்திற்கு ஒருமுறைதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் குடம் ரூ.10 மற்றும் ரூ.15க்கு வாங்கித்தான் குடிநீர் பிரச்சனையை மக்கள் சமாளித்து வருகின்றனர். எனவே குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி நேற்று மகிளா காங்கிரஸ் மதுரை தெற்கு மாவட்ட தலைவி பிரவீனா தலைமையில், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் காந்திசரவணன், வட்டாரத்தலைவர் வெஸ்டன்முருகன் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி அலுவலகத்திற்கு பெண்கள் வந்தனர்.
அங்கு நகராட்சி ஆணையாளர் பாஸ்கரிடம், உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் வாரத்திற்கு எப்போது எந்தநேரம் சப்ளை செய்யப்படும் என்பது முன்னதாக தெரிந்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும். இது சம்மந்தமாக அதிமுக ஆட்சியின்போது பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே உசிலம்பட்டி பகுதி பெண்களின் அடிப்படை குடிநீர் பிரச்சனையை தீர்க்குமாறு மனு கொடுத்தனர். இது சம்மந்தமாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் பாஸ்கர் உறுதியளித்தார். அதன் பின்பு நகராட்சி அலுவலகத்தில் இருந்து பெண்கள் கலைந்து சென்றனர்.