தொண்டி: நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கேஸ் சிலிண்டரின் விலை கட்டுப்பாடு இல்லாமல் மாதம், மாதம் உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி துவக்கத்தில் இருந்து இதுவரை மட்டும் கேஸ் சிலிண்டர் ரூ.285 வரை விலை உயர்ந்துள்ளது. கேஸ் சிலிண்டரை மானிய விலையில் வழங்குவதாக அறிவித்த ஒன்றிய அரசு, அதை வழங்குவதிலும் பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று ஊரடங்கால் வேலையில்லாமலும், வாழ்வாதாரத்தை இழந்தும் சிரமப்படும் மக்களுக்கு கேஸ் சிலிண்டரின் விலை ஏற்றம் மிகுந்த கஷ்டத்ைத ஏற்படுத்தியுள்ளது. எனவே மக்கள் நலன் கருதி கேஸ் சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மனித நேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் தொண்டி ராஜ் கூறுகையில், ‘மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஒன்றிய அரசு நாளுக்கு நாள் அதிரித்து வருகிறது. கொரோனா நோயால் வேலைவாய்ப்பு இல்லாமல் அன்றாடம் குடும்ப நடத்தவே பொதுமக்கள் கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில் இந்த விலைவாசி உயர்வு பெரும் சுமையாக உள்ளது. எனவே ஒன்றிய அரசு பொதுமக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைத்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்’ என்றார்.