காரைக்கால்: நிலுவையில் உள்ள 6 மாத ஊதியம் மற்றும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி புதுச்சேரி அரசே நேரடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி காரைக்கால் நகராட்சி ஊழியர்கள், உள்ளிருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரி அரசு போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் விரக்தி அடைந்த நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலக வாயிலில் துடைப்பம், கூடை மற்றும் குப்பைத் தொட்டியுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக அங்கு வந்த போலீசார் மறியலை கைவிடுமாறு கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நகராட்சி ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது பிரச்னைகளை கூறினர். ஒருவழியாக சமாதானமடைந்த பணியாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.