×

ஆந்திராவில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி வந்தது

திருவள்ளூர்: ஆந்திரா மாநிலம் அம்மம்பள்ளியில் உள்ள கிருஷ்ணா நீர்த்தேக்கத்திலிருந்து 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் நகரி ஆற்றின் வழியாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வினாடிக்கு 198 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் வினாடிக்கு 551 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் பூண்டி நீர்தேக்கத்திற்கு தற்பொழுது வினாடிக்கு 749 கன அடி தண்ணீர் வந்துள்ளது.  இதனால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு உயர்ந்து வருகிறது.

பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் 33.16 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும், மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் 2568 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில், சென்னை மக்களின் குடிநீருக்காக இணைப்புக் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம், புழல் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு வினாடிக்கு 680 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு சென்னை மக்களுக்கு எந்தவித குடிநீர் பிரச்னையும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Krishna ,Andhra ,Pundi , Andhra, Krishna Water, Boondi,
× RELATED சரணாகதியே தத்துவத்தின் ஒரு வெளிப்பாடு