சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: திருத்திய நிதிநிலை அறிக்கை 2021-22ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, கடற்கரையோரங்களைப் பாதுகாப்பதற்கும் தமிழ்நாட்டின் கடற்கரையோரப் பகுதிகளில் மாசுப்பாட்டினை குறைப்பதற்கும் அடுத்த 5 ஆண்டுகளில் 10 கடற்கரைகளில், கடற்கரைகளின் தரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கல்வி, தகவல் மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கான உயர்தரம் அளிக்கும் சர்வதேச நீலக்கொடி தரச் சான்றிதழைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தீர்மானித்து இருக்கிறது.
குறிப்பாக, மெரினா கடற்கரை, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணல்மேல்குடி கடற்கரை, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குஷி கடற்கரை, கடலூர் மாவட்டம் வெள்ளி கடற்கரை, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடற்கரை, செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரை கடற்கரை, நாகப்பட்டினம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரை, விழுப்புரம் மாவட்டம் நாரவாக்கம்- மரக்காணம் கடற்கரை, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரை, நாகப்பட்டினம் மாவட்டம் நெய்தல் நகர் கடற்கரை ஆகிய 10 கடற்கரைகளில் நீலக்கொடி சான்றிதழ் திட்டம் செயல்படுத்தப்படும்.