சென்னை: போதை மருந்து பயன்படுத்திய வழக்கில் நடிகை ரகுல்பிரீத் சிங்கிடம் நேற்று அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். தெலுங்கு பட உலகில் நடக்கும் பார்ட்டிகளில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக புகார் வந்தது. இதையடுத்து தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2017ம் ஆண்டு சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.டைரக்டர் பூரி ஜெகந்நாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், ரவி தேஜா, நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சார்மி, முமைத்கான் உள்பட 12 பேருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியதில் தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. இந்த வழக்கில், 62 பேரிடம் விசாரணை நடைபெற்றது. மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் பல கோடி ரூபாய் ஹவாலா பணம் கைமாறி இருக்கலாம் என அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. இந்நிலையில் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சார்மி, நடிகர் ரவிதேஜா, இயக்குனர் பூரி ஜெகநாத் உள்ளிட்ட பலருக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.இந்நிலையில், சார்மி, அமலாக்கத்துறை முன்பு நேற்றுமுன்தினம் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். ரகுல் பிரீத் சிங் நேற்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ஏற்கனவே போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கன்னட சினிமாவில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.