×

நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திய சான்று இருந்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் ‘சரக்கு’

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இரண்டு செலுத்தியதற்கான சான்று காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மது பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.  தற்போது நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்நிலையில், பாதிப்பு எண்ணிக்கையை மேலும் குறைக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகம் சேராமல் இருக்க புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் நாட்களில் கொரோனா தடுப்பூசி இரண்டு செலுத்தியவர்கள், அதற்குண்டான சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே மது வகைகள் வழங்கப்படும். இதற்கான உத்தரவு டாஸ்மாக் மேலாளர் மூலம் அனைத்து மதுக்கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களுக்கு நேற்றே இந்த தகவலை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்த நிலையில், கடை ஊழியர்கள், மது பிரியர்களிடம்  இன்று முதல் ஊசி போட்டதற்கான சான்றிதழ் எடுத்து வர வேண்டும் என கூறி வருகின்றனர்.
நீலகிரியில் டாஸ்மாக் கடைகள் திறந்து இரு மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், குடிமகன்கள் எவ்வித தடையும் இன்றி கடைகளுக்கு சென்று மது வாங்கிச் சென்றனர்.

தற்போது, ஊசி போட்டதற்கான சான்றிதழ் கட்டாயம் கூறுவதால் மதுப்பிரியர்கள் அப்செட் ஆகியுள்ளனர். இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், ஒரு சில மது பிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

அவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருபவர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது 100 சதவீத மக்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என எடுக்கப்பட்ட நடவடிக்கை. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Tasmac ,Nilagiri district , Ooty: Liquor will be served in Tasmag stores only if proof of payment of corona vaccine two in the Nilgiris district is shown.
× RELATED மறைமலைநகர் அருகே டாஸ்மாக் பாரில்...