சிவகங்கை: கீழடி 7ம் கட்ட அகழாய்வில் அகரம் தலத்தில் ஏராளமான பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி 7ம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 தளங்களிலும் நடந்து வருகிறது. இதில் அகரத்தில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு ஏராளமான பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் வைகை ஆறு, கீழடி, அகரம் வழியாக சென்றிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காரணம் கீழடி அகரத்தில் வணிகம் நடந்ததற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன. அகரத்தில் தோண்டப்பட்ட ஒவ்வொரு குழியிலும் பானைகள் கிடைத்துள்ளன.
சிறுசிறு பானைகள் தவிர, கெண்டி மூக்கு பானை உள்ளிட்ட வித்யாசமான பானைகளும் கிடைத்துள்ளது. தனித்தனி பானைகள் தவிர ஒரேகுழியில் 2 முதல் 5 பானைகள் வரை கிடைத்துள்ளன. 2600 ஆண்டுகளுக்கு மேல் உறுதியாக உள்ள இந்த பானைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இதுவரை அகரத்தில் கிடைத்த பானைகளை வெளியே எடுக்கவில்லை. முதல்முறையாக அகரத்தில் கிடைத்துள்ள பானைகளை வெளியே எடுத்து ஆய்விற்கு பின் காட்சிப்படுத்த தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது. இதுவரை அகரத்தில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட பானைகள் முழுமையாக கிடைத்துள்ளன.