சென்னை : திராவிட களஞ்சிய நூல் வெளியிடுவது தொடர்பாக மக்களை குழப்ப சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் சிலரால் திட்டமிட்டு பரப்பப்படுவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.சட்டமன்றத்தில் தமிழ் வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின் போது வெளியிட்ட அறிவிப்பில், தமிழ் வளர்ச்சித்துறையின் 10வது அறிவிப்பு 2 அம்சங்களை கொண்டது என்று கூறியுள்ளார். முதலாவது இளைய தலைமுறையினருக்கு சங்க இலக்கியத்தை கொண்டு சேர்க்கும் வகையில் சந்தி பிரிக்கப்பட்டு எளிமையான பதிப்புகள் வெளியிடப்படும் என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
2வது அம்சம், கால்டுவெல் தொடங்கி எமனோ. பர்ரோ, அஸ்கோ பார்போலா, ஐராவதம் மகாதேவன், ஆர்பாலகிருஷ்ணன் போன்ற போன்ற திராவிடவியல் அறிஞர்களின் ஆய்வுகள் திராவிட இயக்கம், சுய மரியாதை, சமூக நீதி, இட ஒதுக்கீடு, இரு மொழி கொள்கை, மாநில சுயாட்சி போன்ற அம்சங்கள் குறித்து திராவிட களஞ்சியம் என்ற தனி நூலாக வெளியிடுதல் ஆகும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.மேலும் கடந்த 150 ஆண்டுகளில் தமிழக, இந்திய மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதிய தலையகங்கள்,கவிதைகள், கட்டுரைகள், கதைகள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளை தொகுத்து திராவிட களஞ்சியத்தில் இடம் பெற செய்வோம் என்றும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.எனவே அறிவிப்புகளை தெளிவாக புரிந்து கொள்ளாமல் தேவையற்ற குழப்பங்களை உருவாக்க யாரும் முயல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.