×

காதலனை கரம் பிடிப்பதற்காக இளவரசி பட்டம், ரூ.8.7 கோடியை நிராகரித்த ஜப்பான் இளவரசி !!

டோக்கியோ : காதலனை கரம் பிடிப்பதற்காக இளவரசி பட்டத்தை,  ஜப்பான் இளவரசி மகோ நிராகரித்துள்ளார்.ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரசர் நருஹிட்டோவின் மருமகளுமான இளவரசி மகோ, அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரைக் காதலித்து வருகிறார். தற்போது 29 வயதாகும் இளவரசி மகோவும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கொமுரோவும் 2012-ல் டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக சந்தித்துக் கொண்டனர். அந்த அறிமுகம் நட்பாகி காதலாக மாறியது. கடந்த 2017ம் ஆண்டு கொமுரோ மற்றும் இளவரசி மகோ இருவரும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிச்சயம் செய்துகொண்டனர்.

2018ம் ஆண்டில் முறைப்படி திருமணம் செய்யவும் முடிவு எடுத்திருந்தனர். ஆனால் கொமுரோவின் முன்னாள் காதலியிடம் அவரது தாயார் கடன் வாங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் இவர்களின் திருமணம் தள்ளிப்போனது. தற்போது இளவரசியின் காதலர் கொமுரோ, அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு அந்நாட்டு பார் கவுன்சில் தேர்வு எழுதியுள்ளார். அதில் தேர்ச்சி பெற்றதும் அமெரிக்காவிலேயே பணிபுரிய உள்ளார். இதையடுத்து இளவரசி மகோவும் அமெரிக்காவுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் சாதாரண மக்களைப்போல் எளிய முறையில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இந்தாண்டு இறுதிக்குள் திருமணம் செய்துக்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.  மகோ திருமணம் செய்தபின்னர் இளவரசி என்ற பட்டத்தை இழந்துவிடுவார். ஜப்பான் அரசு குடும்ப விதிப்படி சாதாரண குடும்பத்தினரை ஒருவர் திருமணம் செய்தால் அரசு பட்டத்தை இழக்க நேரிடும்.அரசு குடும்பத்தை சேர்ந்த பெண் என்றால் அதற்காக இழப்பீடு வழங்கப்படும்.அதன்படி இளவரசி மகோவிற்கு இந்திய மதிப்பில் ரூ. 8.76 கோடி இழப்பீடாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும் இழப்பீடு, தனக்கு தேவையில்லை என்று இளவரசி மகோ ஏற்க மறுத்துவிட்டார்.


Tags : ஜப்பான் இளவரசி மகோ
× RELATED கள்ளக்காதலியை கொன்ற இந்திய வம்சாவளிக்கு 20 ஆண்டு சிறை