புதுச்சேரி: புதுச்சேரியில் கலைஞருக்கு சிலை அமைக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் உறுதி அளித்தார். புதுச்சேரி சட்டசபையில் நேற்று திமுக எம்எல்ஏ நாஜிம் பேசுகையில், கலைஞருக்கு கடந்த ஆட்சியின்போது சிலை அமைக்க முடிவு செய்து கமிட்டியும் அமைக்கப்பட்டது. தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர், புதுச்சேரி எப்போதும் தனித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று விரும்பிய தலைவருக்கு இந்த ஆட்சியில் சிலையும், மணி மண்டபமும் அமைத்து தர வேண்டும் என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா (திமுக): தமிழர்களுக்காகவும், சமூக நீதிக்காகவும் வாழ்நாள் எல்லாம் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கலைஞருக்கு புதுச்சேரி அரசு உரிய மரியாதை அளிக்க வேண்டும். அவரது சாதனைகளையும், படைப்புகளையும் வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ள கலைக்கூடம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் நமச்சிவாயம்: கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. அரசு அதனை செய்து தரும். அதே நேரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தமிழர்கள் நலனுக்காக பாடுபட்டு இருக்கிறார். அவருக்கும் சிலை அமைத்தால்தான் நன்றாக இருக்கும். அரசு அதனை நிச்சயம் பரிசீலிக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.