மதுரை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மகன் ரவிச்சந்திரன், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் உள்ளார். எனக்கு 65 வயதாவதால் என்னை உடன் இருந்து கவனித்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே, ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் விடுப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் வீ.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ரவி ஆஜராகி, ‘‘மனுதாரர் தரப்பு கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழக உள்துறை முதன்மை செயலர் முன்னுரிமை அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு 6 வாரத்திற்குள் பரிசீலனை செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.