×

கொரோனா காரணமாக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

* காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்களிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான, உள்ளாட்சி தேர்தலில் வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், கடந்த 2019ல் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது, புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களின் எல்லைகள் பிரிக்கவில்லை. இதனால் அப்போது இந்த 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து 29 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. விடுபட்ட 9 மாவட்டங்களிலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், முதற்கட்டமாக இந்த மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கொரோனா பாதிப்பு காரணமாக வைரஸ் பரவல் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உடல் வெப்ப பரிசோதனை போன்றவை அவசியமாகும். இதுபோன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதால் வாக்குப் பதிவு நேரமான 10 மணி நேரத்தை 12 மணியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு பஞ்சாயத்து (தேர்தல்கள்) விதிகளில் மாற்றம் செய்து உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நாளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை வாக்குப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : State Election Commission , Due to the corona In local elections Increase in voting time: State Election Commission announcement
× RELATED இந்தியாவிலேயே அதிகம் கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு