சென்னை: கேள்வி நேரத்தின் போது திருப்பத்தூர் தொகுதி திமுக உறுப்பினர் அ.நல்லத்தம்பி கேள்விக்கு பதில் அளித்து, அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில்,‘‘விளையாட்டு கட்டமைப்புகளை இன்றைக்கு உலகத்தரமான கட்டமைப்பாக உருவாக்க முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். விளையாட்டு வீரர்களுக்கு இங்கு இருக்கும் பயிற்சியாளர்கள் தேவை இல்லை என்று, உலகத்தில் பல்வேறு பகுதியில் இருக்கின்ற பயிற்சியாளர்களை நியமித்து பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தினுடைய தலைநகரங்களில் எங்கெல்லாம் விளையாட்டு மைதானங்கள் இல்லையோ அங்கே எல்லாம் ஒரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம், ஒரு உள்விளையாட்டு அரங்கம், ஒரு நீச்சல் குளம் என அனைத்து வசதிகளுடன் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்ட பிறகு, கிராம பகுதியிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.