மும்பை,: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எண்ணெய்களின் விலை உயர்வால் பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, மாதத்தின் முதல் நாளான நேற்று மானியம் இல்லாத காஸ் சிலிண்டரின் விலையை ரூ.25 வரை உயர்த்தியது. அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில், பாலிவுட் நடிகர் கமல் ரஷித் கான் தனது டுவிட்டர் பதிவில், ‘பசியால் செத்தாலும் சரி... நாங்கள் மோடியின் பக்தர்கள்; அதனால், நாங்கள் சாகும் வரை மோடிக்கே வாக்களிப்போம். நாங்கள் மோடியின் பக்தர்கள்; எனது குழந்தைகள் படிப்பறிவு இல்லாமல் இருந்தாலும், கிட்னிகளை விற்றாலும், பசியால் இறந்தாலும், நாங்கள் இறக்கும் வரை மோடிக்கே வாக்களிப்போம்! சத்தமாக சொல்லுங்கள் ஜெய் ராம்!’ என்று மறைமுகமாக மோடியையும், அரசையும் சாடியுள்ளார்.
இந்த கருத்துக்கு அவரை பின்தொடரும் பயனர்களும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். குல்தீப் குமார் என்பவர் வெளியிட்ட பதிவில், ‘சகோதரரே! மோடியின் பக்தர்களாக மக்களை மாற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் அதிக ஒத்துழைப்பு அளிப்பதாக நம்புகிறேன். மோடி பக்தராக இருந்தவர், இப்போது மோடியின் குருட்டு பக்தராக மாறிவருகின்றனர். அவர்களிடம் காஸ் விலை உயர்வு குறித்து கேட்டுப் பாருங்கள்! மோடி கீழே இருந்து எரிவாயுவை வெளியே எடுக்கிறார்; அதனை சிலிண்டரில் நிரப்பி தருகிறார். அதனால் தான் விலை அதிகம் என்று கூறுவார்கள்’ என்று கூறியுள்ளார். இவ்வாறாக பலரும் பலவிதமாக தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.