டெல்லி: உலக புகழ்பெற்ற நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ, சர்வதேச அளவில் 111 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். போர்ச்சுகல் நாட்டு கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர கால்பந்து வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச அளவில் சிறந்த வீரராக விளங்கி வருகிறார். 36 வயதான அவர், அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி போட்டியில் 2 கோல்களை அடித்தார். இதனையடுத்து 2 - 1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் சர்வதேச கால்பந்து அரங்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மொத்தம் 111 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
அதோடு சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் ரொனால்டோ படைத்துள்ளார். 1993 முதல் 2006 வரை ஈரானுக்காக விளையாடிய அல் டாய் 149 ஆட்டங்களில் விளையாடி 109 சர்வதேச கோல்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. தற்போது அந்த சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ முறியடித்துள்ளார். அவர் நேற்று இறுதி சில நிமிடங்களில் அடித்த 2 கோல்கள் தான் அவருக்கு 110 மற்றும் 111-ஆவது கோல்களாக அமைந்தன. இதனால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரொனால்டோ சமீபத்தில் தான் யுவென்டஸ் கிளப்பிலிருந்து மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு மீண்டும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.