×

பொள்ளாச்சி-போத்தனூர் இடையே ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி-போத்தனூர் இடையே அகல ரயில் பாதையில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.  பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல்-போத்தனூர் ரயில் பாதை திட்டத்தில் கடந்த 2009ம் ஆண்டு துவங்கப்பட்ட அகல ரயில் பாதை பணி 8 ஆண்டுகளில் நிறைவு பெற்று கடந்த 2015ம் ஆண்டு முதல் முதற்கட்டமாக திருச்செந்தூர், சென்னைக்கும், அடுத்ததாக சென்னை, பாலக்காடு, கோவை என பல்வேறு பகுதிகளுக்கு அடுத்தடுத்து ரயில் சேவை துவங்கியது. இதற்கிடையே, பொள்ளாச்சி வழியாக செல்லும் திண்டுக்கல், போத்தனூர், பாலக்காடு வரையிலான அகல ரயில் பாதையை மின்மயமாக்கி, பொள்ளாச்சி வழியாக  ரயில் சேவையை மேலும் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, திண்டுக்கல்-போத்தனூர் மற்றும் பாலக்காடு வரையிலான அகல ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிக்காக, சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, கிணத்துக்கடவு வழியாக கோவை அருகே போத்தனூர் வரை அகல ரயில் பாதையில் நவீன கருவி கொண்டு அளவீடும் பணி நடைபெற்றது.

அதன்பின், பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் வரை சுமார் 39 கிமீ தூரத்திற்கிடையே மின் கம்பங்கள் அமைப்பதற்காக, ஆங்காங்கே கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றது.  இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, பொள்ளாச்சி-போத்தனூர் இடையே  பயணிகள் ரயில் சேவை ரயில் நிறுத்தப்பட்டதால், மின் மயமாக்குவதற்கான கம்பங்கள் அமைக்கும் பணி  இடைவிடாமல் நடந்தது.

போத்தனூரில் இருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி வரை ஆங்காங்கே அமைக்கப்பட்ட கம்பத்தில், முறுக்கு மின் கம்பிகள் கட்டி,  மின்கம்பிகளை சீர்படுத்தும் பணி நிறைவு பெற்றது.  போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி வரை மின்மயமாக்கல் பணி நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்டமாக பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு மற்றும் பழனி வழித்தடத்தில்  மின்மயமாக்கல் பணி இரண்டு மாதத்திற்கு முன்பு துவங்கப்பட்டது.தற்போது, அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்து  பொள்ளாச்சி-போத்தனூர் இடையே ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.

கோவை அருகே போத்தனூரில் இருந்து பகல் 12.20 மணிக்கு புறப்பட்ட ரயில் என்ஜின், சுமார் 75 கிமீ வேகத்தில் 1.03 மணிக்கு  பொள்ளாச்சி வந்தடைந்தது. வரும் வழியில் தண்டவாள உறுதி தன்மை, மின்கம்பிகளின் சமநிலை, ரயில் என்ஜின் வேகம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின், பொள்ளாச்சியில் இருந்து பகல் 1.20 மணிக்கு  புறப்பட்டு 2.05 மணிக்கு போத்தனூர் சென்றடைந்தது. தற்போதும், தளர்வுடன் கொரோனா ஊரடங்கு தொடர்வதால் பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூர், கோவை, பாலக்காடு செல்லும் பயணிகள் ரயில் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : Pollachi ,Bothanur , Pollachi, Pothanoor, Electric line, Train engine test Run
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!